வாசிப்பு. ஒரு தேசியக் குற்றம் !

பாரன்ஹீட் 451 (Fahrenheit 451) ரே பிராட்பரி ஆங்கிலத்தில் 64 வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புதினம். இப்போது அது நமது கைகளில் தமிழில். இத்தனை வருடங்களுக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு இது தமிழில் வெளிவந்திருக்கிறது.

Fahrenheit 451 என்பது புத்கத்தாள் தீப்பற்றி எறியும் வெப்ப நிலை.

“கோடு போட்ட தாள் உனக்கு கொடுக்கப்பட்டால் வேறு திசையில் எழுது” என்று ரமோனின் வார்த்தைகள் முத்தாய்ப்பாய் முதல் பக்கத்தில்.

பிராட்பரி ஒரு முறை சொல்கிறார், மக்களை கண்காணித்துச் சுதந்திரத்தைக் குறைக்கும் அரசைவிட மக்களைக் கவர்ச்சியால் கிறங்கடிக்கும் ஜனரஞ்சகக் கேளிக்கைகளிடம் அதிக பயம் எனக்குண்டு என்கிறார் (தற்போது உலவும் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக்கை எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கின்றேன்). நீங்கள் இந்த செய்தியை படிப்பதும் வாட்ஸஅப் மூலமும் என்னுடைய ப்ளாக்கின் மூலமும் என்பது இன்னொரு அவலம். அடுத்த மாடல் மொபைலைப் பற்றி பேச நேரம் இருக்கும் நமக்கு ஒரு புத்தகத்தை பற்றி பேச நேரமில்லை.

புத்தகத்தை படித்தோமா தூக்கி பரண்மேல் போட்டாமா என்று இருக்கவேண்டியதுதானே ? என நீங்கள் கேட்கலாம். ஆனால், படித்துவிட்டு வெட்டி விமர்சனங்களை செய்வதில் எனக்கு எள்ளவும் நம்பிக்கையில்லை… ஆனால் ஆத்மார்த்தமான விவாதங்களையும் படித்தவற்றை பகிர்ந்துகொள்ளுவதும் தான் அறிவு பசிக்கு நாம் போடும் தீனி என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன் நான்.

படித்தால் நமது நாட்டில் தூக்கு. படித்தால் நீ ஆயுள் தண்டனைக் கைதி. படித்தால் உன் புத்தகங்ளோடு சேர்ந்து நீயும் எரிக்கப்படுவாய் என்ற தண்டனைகள் உண்மையில் இருந்தால், இறப்பதற்கு முன்பு ஒரு புத்தகத்தை படித்துவிட்டு இறக்கலாமே அதில் என்ன உள்ளது என்று தேடும் மற்றும் தெரிந்துகொள்ளும் ஆவல் நமக்கு பிறப்பது இயற்கைதானே ? படிப்பின் உன்னதத்தைக் கூறும், அதன் முக்கியத்துவத்தைக் கூறும் ஒரு புத்தகத்தை என் வாழ்நாளில் நான் படித்ததே கிடையாது. ஆதலால்தான் இந்த விளம்பரம் மூலம் என் வார்த்தைகளால் உங்களை வந்தடைந்துள்ளேன்.

ரே பிராட்பரியை விளம்பரப்படுத்துவதால் நான் அவருக்கு பேரனும் இல்லை அவர் எனக்கு தாத்தாவும் இல்லை. புத்தகத்தின் மற்றும் படிப்பின் மகத்துவம் புரிந்த நாங்கள் இருவருமே ஒரே மாதிரியான முட்டாள்கள்தான். படித்த முட்டாள்கள் அல்ல. படிக்கும் முட்டாள்கள்.

சரி மேட்டருக்கு வருவோம்…..

இப்புத்தகம் dystopian literature அடிப்படையைக் கொண்டது. அதாவது, எதிர்காலத்தைப்பற்றிய அவநம்பிக்கை தருவதாக, நடந்துவிடவேண்டாம் என்று அச்சத்தைத் தெரிவிப்பதாக இருக்கும் எழுத்துக்கள் அதற்கு பெயர் மருட்சி இலக்கியம் அல்லது எச்சரிக்கை இலக்கியம்.  புதிய சாதனைகளை வியந்து பாரட்டும் விஞ்ஞான உலகத்தில் சமூகத்தின்  மற்றும் அதன் போக்கின் அவலத்தை முன்னிருத்தி எழுதிய ஆசிரியரின் வார்த்தைகள் உண்மைகளால் நிறைந்தவை.  தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் படித்ததாக கூறப்படும் உலக நாவல்கள் பட்டியலில் இப்புத்தகம் இடம்பெறவில்லை.

அவருடைய இந்த பயம் புத்தகம் வெளிவந்து  64 வருடங்கள் கழித்தும் பல்கி பெருகியிருக்கிறது. இப்போது நாம் வலைதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஒரு சொடுக்கில் வேண்டிய படத்தை பார்த்தும், பாட்டைக் கேட்டும் தன்னை, தன்னைச் சுற்றியிருப்பவர்களை மறக்கலாம். வலையில் விளையாடலாம். கூத்தடிக்கலாம். பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் சென்று, புத்தகமில்லாத வீடுகளை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். வாசிப்பது பலருக்கு கடப்பாரையை முழுங்குவது போல. சில நிமிடங்களுக்கு மேல் ஒரு கட்டுரையையோ அல்லது செய்தியையோ செய்தித்தாளிலோ ஏன் வலைதளத்திலோ படிக்கவே பொறுமையிழந்து உள்ளோம். ஆற்றல் இல்லை. நாவலாசிரியர் பயந்தபடி, புத்தகமில்லா சமூகத்தை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.  அவர் எச்சரித்தது உண்மையாகி வருகிறது.  இந்த வெகுஜனக் கலாச்சாரமும் எதிர்கால சமூகம் பற்றிய மருட்சிக்கு ஒரு காரணம். சிந்தனைகளை ஒடுக்கும் அதிகாரமும் அடக்குமுறைகளும் இங்கு தாராளமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இது கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அழிவுக்கு அடிக்கல் என்பது நாவல் தரும் எச்சரிக்கை.

இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். ஆதலால்தான் எந்த ஊர் எந்த நாடு என்று எதுவுமே குறிப்பிடப்பெறாமல் நிகழ்வுகள் இந்நாவலில் நடக்கின்றன.

புத்தகங்கள் படிப்பதைத் தடை செய்த ஒரு நாட்டில் புத்தகங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு தீயணைப்பாளனுக்கு செய்யும் தொழிலில் மகிழ்ச்சி இருந்தது. இந்தத் தொழில் மீது இருந்த பிடிப்பு வெறுப்பாக மாறித் தொழிலை உதறும் அவனுடைய மனதின் பரிமாணமே கதை.

மோன்டாக், கதையின் நாயகன். ஒரு தீயணைப்பாளன். பியாட்டி அவனுடைய பாஸ்.  ஊரில் படிப்பவன் புத்தகங்களோடு பிடிபடும்போது அபாய மணி ஒலிக்கும். தீயணைப்பு வீரர்கள் வண்டியில் மண்ணன்னெய்  நிரப்பிக்கொண்டு விரைந்து சென்று புத்தகங்களை எரித்துவிட்டு அந்த வாசகனையும் எரித்துவிட்டு வருவது  அவர்களது தொழில் அல்லது கடமை.

வீட்டிலோ அவனது மனைவி டி.வி நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டவள். ஒரு அடக்குமுறை அரசு மக்களை முதலில் டி.வி மூலமாகத்தான் கெடுக்க ஆரம்பிக்கும். நாடகத்திலேயே அவள் வாழ்க்கை நகர்ந்தது.

இப்படி மோன்டாக்கின் வாழ்க்கை சென்றபோது ஒரு முறை புத்தகங்களில் என்ன இருக்கின்றதை அறிய அவன் பிரயத்தனப்பட்டான். விழைவு… அவன் புத்தகத்தை எரிக்க போகும் இடமெல்லாம் தீவைக்கும்  முன் சில புத்தகங்களை திருடி பியாட்டி அவர்களுக்கு தெரியாமல் வீட்டில் ஒரு சிறிய நூலத்தையே வைத்துவிட்டான். மறைத்து மறைத்து வைத்து படிக்க ஆரம்பித்த அவன் பியாட்டி மூலம் ஒரு முறை எச்சரிக்கை செய்யப்படுகிறான். ஒரு கட்டத்தில் பியாட்டி அவனை கைது செய்ய நேரிடும சமயத்தில் புத்தகத்தை எரிக்க சென்ற இடத்தில் இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்டு அவரையே தன் தீ பிழம்பினால் எறித்துவிட்டு தன்னிடமிருந்த புத்தகங்களை ஒரு தீயணைப்பு வீரனின் வீட்டில் மறைத்துவைத்துவிட்டு அபாய மணியை அழைத்து விட்டு அங்கிருந்து தப்பிக்கின்றான்.

ராணும் தேட ஆரம்பிக்கின்றது. போர் ஆரம்பிக்கும் நேரம். உள்ளுர் பேராசிரியர் ஒருவரின் உதவியுடன் ஆற்றைக் கடந்து காட்டுக்குள் வசிக்கும் விஞ்ஞானிகள், புத்தக ஆசிரியர்களுடன் சேருகிறான். அவர்களும் அப்படித்தான் புத்தகங்களை வைத்துக்கொள்வதில்லை. படித்துவிட்டு அவர்களே எரித்துவிடுவார்கள். மோன்டாக் அவர்களுக்கு தலைவனாகிறான். அவன் பின் கூட்டம் செல்கிறது. மோன்டாக் இதுவரை படித்து மனப்பாடம் செய்த புத்தகங்களை பற்றி பேசுகிறான். ஊர் ஊராக சென்று புத்தகங்களை பிரசங்கம் செய்ய இயலாது. அவனே ஒரு புத்தகமாக மாறுகிறான். எல்லோரும் புத்தகமாக மாறி தனக்கு நினைவு இருக்கும் வரை மற்றவர்களுக்கு போதிக்க ஊர் ஊராக் கிளம்புகின்றனர்.  தெரிந்தவற்றை நினைவுபடுத்தி அதை அச்சில் கோர்க்க அந்த கூட்டம் முடிவு செய்கிறது. எதிர்காலத்தை நோக்கி அவர்கள் அடியெடுத்து வைத்து புத்தகங்களின் மற்றும் வாசிப்பின் மகத்துவத்தை பரப்புரை செய்ய கிளம்புகிறார்கள். அந்த மாலைப்பொழுதில் மோன்டாக்கிற்கு அந்த ஆற்றின் இரு கரைகளிலும் 12 விதமாக பழங்களை கொடுக்கும் மரங்கள் இருப்பதை அறிகிறான்.  நகரத்தை அடையும்போது நண்பகலுக்காக அவன் சேமித்து வைக்கப்போவதும் அவைகளைத்தான்.

கதையின் சுருக்கம் இவ்வளவுதான்.

புத்தகத்தில் ரசித்த வரிகள்…

•ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பக்கங்கள்….

• நான்தான் ப்ளோட்டாவின் குடியரசு. நீங்கள் மார்கஸ் ஆரெலியஸ் படிக்கவேண்டுமா ? சிம்மன்ஸ் இருக்கிறானே அவன்தான் அது.

• சாலைகளிலும் இருப்புப்பாதைகளிலும் கைவிடப்பட்டவர்கள் வெளியே பரதேசிகளாகவும்  உள்ளே நூலகங்களாகவும் இருக்கிறார்கள்.

• அவர்களுக்கு தெரிந்தவற்றையெல்லாம் ஒப்பிக்கச் சொல்லி அவற்றை பதிவில் ஏற்றலாம்.

•புத்தகங்களுக்கு போடப்படும் அட்டைகளைவிட நாங்கள் ஒன்றும் உயர்ந்தவர்கள் அல்ல.

•தாத்தா இறந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டாலும் என்னுடைய மண்டையோட்டைத் தூக்கிப் பார்த்தீர்களென்றால், ஆண்டவனே, அவருடைய பெருவிரல் ரேகையின் அச்சுகள்பெரிய வரப்புகளைப்போல என்னுடைய மூளையின் மடிப்புகளில் தென்படும்.

• சாகும் போது எல்லாரும் தங்களுக்கு பின்னால் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று என் தாத்தா சொல்வார்.  ஒரு குழந்தை அல்லது ஒரு புத்தகம் அல்லது ஒரு ஓவியம் அல்லது ஒரு ஜோடி செருப்பு அல்லது தான் வளர்த்த ஒரு தோட்டம். ஏதோ ஒன்று உங்கள் கைகளால் தொடப்பட்ட ஒன்று இருந்தால், உங்கள் மரணத்திற்கு பிறகு ஆன்மா போவதற்கென்று ஒரு இடம் இருக்கும்.

•வினோதமான எல்லாக் கிழட்டு ஜந்துக்களையும் சில ஆண்டுகளிலேயே ஒழித்துக் கட்டிவிடமுடியாது.  பள்ளிக் கூடத்தில் செய்ய முயல்வதை ஒருவரின் குடும்பச் சூழ்நிலை இல்லாமல் ஆக்கிவிட முடியும். ஆகவேதான், ஒவ்வொரு ஆண்டும் மழலையர் பள்ளிக்குச் செல்லும் வயதை குறைத்துக்கொண்டே வந்திருக்கிறோம்.

படிப்போம். பகிர்வோம். வளைதளங்களில் அல்ல. நண்பர்களுடனான வாதங்களில்….. 

 

கடவுள்களுடன் தேநீர் – அணிந்துரை

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு.சு.மாதவன் அவர்கள் கடவுள்களுடன் தேநீர் புத்தகத்திற்கு கொடுத்த அணிந்துரையை கடைசி நேரத்தில் புத்தகத்துடன் அச்சில் கொண்டு வர இயலா நிலை. கிண்டில் பதிப்பிலும் கோர்க்க முடியாமல் போய்விட்டது. அடுத்த பதிப்பில் புத்தகத்தில் இவை இடம்பெறும்.

ஐயாவின் அணிந்துரையை இன்று இதில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். 

 “கடவுள்களுடன் தேநீர்நூலுக்கான அணிந்துரை

உங்களை நீங்கள் மீட்டெடுக்க விரும்புகிறீர்களா?!
உங்களை நீங்களே மீட்டிக்கொள்ள விரும்புகிறீர்களா?!

ஆம் என்றால் நீங்கள் படிக்க வேண்டிய நூலைத்தான் இப்போது உங்கள் கைகளில் வைத்திருக்கிறீர்கள்…!வாழ்வை ரசித்து ரசிக்கவைக்கும் ஒரு பொறுப்புள்ள இளைஞனின் சொற்சித்திரங்கள் இவை….! இவற்றை நான் சொற்சித்திரங்கள் என்று சொல்லக் காரணம் இவை தம்முள் தம்மை வரைவதோடு நம்முள் நம்மையும் வரைகின்றன. இந்தச் சித்திரத்தில் உங்களை நீங்கள் உயிர்ப்பித்தெழக் காண்பீர்கள்! நான் கண்டேன் என்னை! அதனால் நீங்களும் காண்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்த நூல் ஒரு அனுபவத்தேடல்இந்த நூல் ஒரு ஞானத்தேடல்….இந்த நூல் ஒரு மானுடத்தேடல்….இந்த நூல் ஒரு சமூகத்தேடல்….இந்த நூல் ஒரு மரபுத்தேடல்….

இந்தச் சமூகம் தன்னைத்தானே படைத்துக் கொள்கின்றது – ஒரு படைப்பாளன் மூலமாக! அப்படி ஒரு படைப்புதான் இந்த நூல்…..!

இதுவரையில் மனிதன் உடன்வாழும் மனிதர்களோடு பேச எத்தனையோ எதத்தனையோ ஊடக வடிவங்களையும் உத்திகளையும் கண்டுபிடித்துக் கையாண்டு வந்துள்ளான். மொழிதான் அத்தனை மாற்றங்களையும் விளைவிக்கிறது.  சமூகத்தில் இத்தனை மாற்றங்களை விளைவிக்கும் மொழி ஒரு மனிதனுக்குள் எத்தனை உணர்வுகளை …. சிந்தனைகளை.. நடவடிக்கைகளை உண்டாக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!

மனிதனின் வாழ்க்கைக்குள் ஏற்படும் மாற்றங்கள் அவனின் வார்த்தைக்குள்தான் முளைவிடுகின்றன; அவனின் வார்த்தைகள் அவனின் வாழ்க்கைக்குள் இருந்துதான் கிளைவிடுகின்றன. இப்படி முளைத்ததும் கிளைத்ததுமாக நம் கைககளில் நளினமுகம் காட்டும் வார்த்தைச் சித்திரங்கள்தான் இந்த நூல்….!

சிறுகதைப் பாங்கு, கவித்துவப்பாங்கு உரையாடல் பாங்கு என்ற மூன்று பாங்குகளோடு இதோ ஒரு பாகு….!இது காய்ச்சிவந்த பாகு அல்ல….! காய்த்துவந்த பாகு!

ஆம்அனுபவப் பாகு…!  பாகு என்றாலே அதிரசம்தானே…?!

இந்த நூலும் ‘அதி’ ‘ரசம்’தான் …! என்று படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள்…! இந்த ஞானத் தேடல் நூல் 40 எண்ணப் பதிவுகளின் சொற்சித்திரத் தொகுப்பு…!

இந்த நூலைப் படித்துமுடித்தபோது இப்படியான அனுபவப் பகிர்வுகளை இன்னும் சில பல இளைஞர்கள் எழுதினால் எத்தனை அனுபவப் பிழிவுகள் கிடைக்கும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

குடும்பஅட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, படித்திருந்தாலோ பணியிருந்தாலோ வருகைப்பதிவேடு…. இவற்றில் மட்டுமே இடம்பெறும் பல மனிதர்களின் பெயர்களையும் அவர்தம் நடவடிக்கைகளையும் உணர்வுகளையும சிந்தனையையும் காலத்தால் அழியாத எழுத்தில் வடித்து வரலாற்று வாழ்வு தந்துள்ளார் ஜ.பாரத்….!

.பாரத் வடித்திருப்பது எழுத்து           ! வருகிறார்கள் மக்கள் எழுந்து

ஆம்…! ஆத்தா, ஆச்சி, அப்பா, அம்மா, நண்பர்கள், ஆசிரியர், கடைக்காரர்கள், தூய்மைப்பணியாளர்கள்,..இப்படி எத்தனையோ பேர் எழுந்து நடமாடுகிறார்கள் ஜ.பாரத்தின் எழுத்தில்…!

40 பதிவுகள் பற்றியும் எழுதத் தொடங்கினால் என் அனுபவமும் இணைந்து அது ஒரு தனி நூலாகிவிடும். அதனால் சிலவற்றைக் குறிப்பிட்டு நிறைவுசெய்கிறேன்.

40 பதிவுகளையும் வகைப்படு்த்தினால் சொந்தபந்த அக்கறை, சமூக அக்கறை, நட்பு அக்கறை, கலை அக்கறை, இயற்கை ரசனை, ஞானத் தேடல்….என வகைமைப்படுத்தலாம்.

சமூக அக்கறையும் சொந்தபந்த அக்கறையும் யார்யாரை மிஞ்சுவது எனப் போட்டி போடுகின்றன இவர் எழுத்துக்களில் ….

இடையில் நான் மட்டும் குறைச்சலானவனா என்று நட்பு முன்வந்து நிற்கிறது. இந்த மூன்றுக்குமிடையே இயற்கை ரசனையும் ஞானத் தேடலும் வந்துவந்து தலையாட்டுகின்றன. எப்போதேனும் பள்ளி, கல்லூரி நினைவுகள் கையசைக்கின்றன.

இந்த 40 பதிவுகளில் ஆங்காங்கே அனுபவப் பிழிவு மொழிகள் (பொன்மொழிகள் என்போமே.. அப்படியானவை) ஒளிவீசி ஜொலிக்கின்றன. அத்தகைய மொழிகளுள் சில இதோ:

“காலம்தான் யாரிடமும் ஏற்றத்தாழ்வ பார்ப்பதில்லையே”        (உரிமை)

“நினைவுகளின் குவியல் அந்த வீடு”                       (உரிமை)

“நம் உடம்புக்குத்தான் வயசாகுதே தவிர, நமக்குள்ள இருக்கிற குழந்தைக்கு என்னைக்கும் வயசாகுறதில்லை”    (போளி தாத்தா)

“ஆத்தா மற்றும் பாட்டியிடம் வளர கொடுத்துவைத்திருக்க வேண்டும் (கடவுள்முன்)

“சுத்தியுள்ள மனுஷங்களை பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோடன்ன, பேய்ங்க மேல் சுத்தமா பயம் போய்டுச்சுடா”                         (பிசாசு)

“படிப்பு ரீதியான காரணத்திற்கு என்றுமே சுதந்திரம் உண்டு வீட்டில்”

(பிராயச்சித்தம்)

“முடியாதவர்களை மேலே கொண்டுவருவது தானே ஆசிரியர் பணி?”

(அடையாளம்)

இதேபோல் படித்துக்கொண்டே போனபோது காவியப் பண்புள்ள பகுதிகள் என நான் எண்ணிக் குறித்து வைத்தவற்றில் சில இதோ:

  1. வெயில் எனக்கு இன்னொரு அம்மா. வெயில் என்னுடைய நண்பன், அது ஒரு டவுசர் காலம்….

மீசை முளைக்கும் முன்பே, மீசைக்கான உரமாக வியர்வையாய், மேல் உதட்டின் மேல் முத்துக்களாய் நீர், வெயில்”

‘அடுத்த நாளும் விடியும் அதே வெயிலிலே’               (வெயில்)

வெயில் பற்றிய ஜ.பாரத்தின் இந்த எழுத்துச் சித்திரத்தைப் படித்ததும் பாரதியின் வசன கவிதைகளின் பண்புகள் இவரின் எழுத்தில் மிளர்வதைக் கண்ணுற்றேன்.

இந்த நூலின் ஆகச்சிறந்த எழுத்துச் சித்திரங்களில் இந்த வெயிலும் ஒன்று.

  1. “தாய்மாமன்கள் நம்மூலமாக அவர்கள் தங்கையையோ அக்காவையோ பார்ப்பதும் நாம் தம் அம்மாக்களை மாமன்களிடத்தில் பார்ப்பதும்….”

“நம் அ்பபாக்களையும் முந்திக்கொண்டு நமக்கு ஏதாவது முதன்முதலில் செய்துவிடுவார்கள் இ்ந்த மாமன்கள்”              (தாய்மாமன்)

  1. “முகத்தைப் பார்க்க இன்னும் ஆவல் கூடியது எங்கோ ரத்தமும் சதையுமாகப் பார்த்தவை இவை. அதற்குத்தான் இவ்வளவு விளக்கங்கள்” (கண்டதைச் சொல்லுகிறேன்)

ஆத்தா! அம்மாவைப் பெற்ற தில்லையம்மாளையும் அப்பாவைப் பெற்ற தர்மாம்பாள் அம்மாவையும் நினைவுகூரும் அழகிய பதிவு இது.

  1. ரோக்காவில் இல்லாத ஒன்றைக் கடைசியாகப் பையில் போட்டு அனுப்புவாராம் கடைகாரப் பெரியப்பா:

“அன்பளிப்பாய்க் கல்கண்டு – 100 கிராம்”           (கல்கண்டு)

இப்போது கானாமல் போனது கல்கண்டு மட்டுமா?!

  1. “இத்தனைக்கும் அது காஸ்ட்லியான வாட்ச்செல்லாம் இல்ல அப்பா கட்டுனதுனால அது காஸ்ட்லி” (கைக்கடிகாரம்)

இதேபோல், இன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல; என்றைக்கும் மனதில் பதியத்தக்க வாழ்க்கை விழுமியங்களை சொல்லும் பதிவுகளில் சில இதோ:

  1. “எங்கள் பள்ளிக் காலங்களில் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் விருந்திற்கு அவர்கள் வீட்டில் கொடுக்கும் விருந்தோம்பலுக்கு ஈடேயில்லை. அவனுடைய அண்ணன், அம்மா, அப்பா அனைவரும் பாசக்காரர்கள்”

எப்போதுமே, ரம்ஜான் என்றால் பிரியாணி இரண்டாம் பட்சம்தான். இர்ஷாத் இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருப்பான் என்பதே என் பிரதான கேள்வியாக இருக்கும். இந்த ரம்ஜானுடன் அவனைப் பார்த்து 23 வருடங்கள் ஆகின்றன.

என்வாழ்த்து அவனைக் கண்டிப்பாகச் சென்றடையும். நான் இப்படித்தான் பிதற்றிக் கொண்டிருப்பேன் என்பதையும் அவன் அறிவான்.”                                          (நட்பு)

எழுத்தாளர் ஜ.பாரத்தின் 10 வயதில் துளிர்த்த இந்த மத நல்லிணக்க நட்பு இன்றைய இந்தியாவில் ஒவ்வொருவர் நெஞ்சிலும் தூவத்தக்க வார்த்தை விதைகள் எனப் பதியம் போடத் தக்கதாகும்.

நம் பாரத் நெஞ்சில் முளைத்த இந்த மதநல்லிணக்க நட்பு நம் பாரதத்தில் முளைக்க வேண்டும்! இது ஒரு இந்தியக் கனவு…!

இந்த நூலின் ஆகச் சிறந்த எழுத்தோவியங்களுள் இதுவும் ஒன்று.

  1. “மஞ்சள் அப்பிய உள்ளங் கைகள்…. மேனுவல் ஸ்கேவன்ஜர்ஸ் என்று அழைக்கப்படும் மனித தெய்வங்கள் அவர்கள் என்பதை உணர்ந்தேன்”

‘அவர்கள் பெரும்பாலும் சாப்பிடும் பொருளைப் பார்க்காமலேயே சாப்பிட்டார்கள்’                         (கடவுள்களுடன் தேநீர்)

இன்றைய கொரோனாக் கொடுங்காலத்தில் எல்லோரும் தூய்மைப் பணியாளர்களை மனித தெய்வங்கள் என்று பயன்கருதிப் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எழுத்தாளர் ஜ.பாரத்தோ முன்பே பல்லாண்டுகளுக்கு முன்பே எண்ணி எழுதியுள்ளார் என்பது வலியும் குமுறலுமான பதிவாகும்.

இதேபோல சில இடங்களில் சில பதிவுகளில் தேநீர்க்கடை வந்து கொண்டே இருக்கிறது.  அந்த வகையில்,

தேநீர்க்கடை வெறும் தேநீர்க்கடையல்ல     எழுத்தாளர் பாரத்துக்கு

     அதுபோதி ஞானக் கடை’…!

நமக்கும்தானே?!

இந்த நூலின் ஆகச் சிறந்த சிந்தனைச் சித்திரங்களுள் இதுவும் ஒன்று.

  1. “இதெல்லாம் விட்டுட்டு நகரத்துக்கும் அசலூருக்கும் என்னைக்குக் குடிபோனோமோ அன்றே தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம்.

“ஒரு வைரசுக்கு இருக்கும் தன்மை ஒட்டிக்கொள்ளும் தன்மைகூட மனிதர்களாகிய நம்மிடமில்லையே”                 (கொரோனா)

இதைவிட எப்படிச்சொல்லமுடியும்?!

நம் சொந்தபந்தங்களோடு ஒட்டிக்கொள்ள வேண்டுமென்பதை…

நம் சமூகத்தோடு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதை…

நம் நட்புக்களோடு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதை…

நாமும் வைரஸைவிடக் கொடுமையானவர்களாக இருக்கப் போகிறோமா? மனிதநேயம் ஒட்டிக்கொள்ளத் தழைக்கப்போகிறோமா?

காலம் நம்முன் வைக்கும் கேள்வியைக் காலம் தவறாமல் – ஒரு எழுத்தாளனுக்குரிய சமூகப் பொறுப்புணர்வு தவறாமல் நம்முன்

எழுப்புகிறார் எழுத்தாளர் ஜ.பாரத்.

  1. “கும்பகோணத்தின் வாசனையை வண்டி ஊர் எல்லையைக் கடக்கும் முன்னரே அனுபவிக்க வேண்டி. மூச்சை நன்றாக உள்ளே … வாங்கி வாங்கி… உள்ளே மட்டுமே வாங்கிவிட்டு மறுபடியும் இருக்கைக்கு வந்தேன். ஓர் ஆழ்ந்த பெருமூச்சு புஷ்…ஷ்….

“தூக்கம் தொலைந்தது அது நிம்மதிப் பெருமூச்சு என்று யார் சொன்னது?”                                   (தூக்கம்)

அது பூர்வீக மண்ணின் உயிர்மூச்சல்லவா பாரத்?!

இப்படித்தான் நானும் நான் பிறந்த ஊரான கள்ளக்காத்தான் சென்றதும் வெற்றுக்காலுடனேயே நடப்பது வழக்கம், பழக்கம் பிறந்த மண்பாசமது…!

இப்படி…. படிக்கப்படிக்க கண்ணும்கருத்தும் நாசியும்வாசமும் செவியும்புவியுமாக மெய்யும்உணர்வுமாக வாயும்வாய்மையுமாக … உற்றறியும் ஐம்புலனும் மன ஓர்மை (தியானம்) துலங்க ஈர்த்துச்செல்கின்றன இவரின் எழுத்துக்கள்!

தமிழரின் தாவரமான பனையோலை நினைவுகளில் தொடங்கி உலகக் கொடுநோயான ‘கொரோனா’ கொடுமைவரை சிந்தனைப் பந்தி வைத்திருக்கிறது இந்த நூல்.  தொடக்கத்திலிருந்து முடிவுவரை இந்த நூல் பேசும் கொடுமைகளெல்லாம் முடிய வேண்டுமே! மானுடம் தழைக்க வேண்டுமே!! என்று சொல்கிறது படித்துமுடித்த என் மனசு… உங்கள் மனசு…?!

படித்து முடியுங்கள் இதையே சொல்லும் உங்கள் மனசும்…

இப்படியொரு நூலை என் அறிவார்ந்த அன்பு நண்பர் தமிழ் பௌத்த ஆய்வறிஞர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் திருமகனார் ஜ.பாரத்தான் இந்நூலாசிரியர் என்பது நட்பீன்ற பொழுதினும் பெரிதுவக்குமன்றோ…?

நான் பார்த்து துளிர்த்த ஒரு விதை ஏராளம் சிந்தனைப் பூக்களை விதைகளாய்த் தூவுவதைக் காணும் இந்தப் பேருவகை இன்னும் பல நூலாக்கங்களின்மூலம் தொடர வேண்டுமென்று வாஞ்சையுடன் வாழ்த்துகிறேன்.

நிறையன்புடன் (சு.மாதவன்)                     

 

102557795_2572227063105933_282438797436649472_o

விதை.

“ஏய் என்னடி அது பாட்டு படிக்கிற ? வரப்போறவன அவன் இவன்னு சொல்லிக்கிட்டு. பாட்டா எழுதுறானுங்க”. இந்த அதட்டல் வந்ததற்கு காரணம்.

“யாரோ யாரோடி உன்னோட புருஷன்….” அலை பாயுதே பாடலை முணு முணுத்தபடி பிரியா ஊஞ்சலண்டை ஆடிக்கொண்டிருந்ததால் தான்.


எங்கள்ஆச்சியின் கோபம்தான் அது. அவள் கோபப்படுவாள். அதில் நியாயம் எப்பவும் இருக்கும்.

யாரையும் தொந்தரவு செய்யாத கோபம். அவள் சுபாவம் அப்படி.

அவள், மாமனாரைப் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய பெயரைக்கூட உச்சரித்ததில்லை. மாமியாருக்கு, கணவனுக்கு, மாப்பிள்ளைகளுக்கு, மருமகள்களுக்கு பிற்காலத்தில் பேரன்கள், பேத்திகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என்று அவள் யாவருக்கும் கொடுத்த மரியாதையும் விருந்தோம்பலும், தென் தமிழகத்தின் கோடி மூலையில் அமைந்துள்ள சிறிய ஊரான கல்லூரணியில் இருந்து கொண்டு வந்ததுதான். கல்லூரணி என்ற ஊர் இருப்பதே நிறைய பேருக்கு இன்னமும் தெரியாது.

காலத்துக்கு ஏற்றவாறு தன்னை அப்டேட் செய்துகொண்டே வந்தவள்.

“அதுவா அது ஒரு பழைய பஞ்சாங்கம்” என்ற பெயரை தற்கால வெகுஜனத்திடம் எடுக்காதவள்.

பழமை வேறு பழசு வேறு என்ற வேறுபாட்டை உணர்ந்து நாளுக்கு நாள் இயங்கிக்கொண்டிருந்தவள்.

அவள் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு மாபெரும் ஆளுமை என்ற எண்ணத்தை யாரிடமும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை, நாங்களும் கூட ஒரு நாளும் அதை உணர்ந்ததே இல்லை. சாதாரணம். அவ்வளவுதான். பெரியதாக ஒன்றுமில்லை சொல்லிக்கொள்ளவும். ஆனால், அவள் ஒரு மாபெரும் ஆளுமை. அவள் சென்றபிறகுதான் அதை யாவரும் உணர்ந்தனர்.

இருந்தவரை எங்களுக்கெல்லாம் எதோ ஒரு நாதியிருக்கிறது என்று எண்ணித்தான், ஒவ்வொரு விடுமுறையும் கழியும்.

வீட்டில் பெரியவர்களின் ப்ரசன்ஸ் என்பது இதுதான். எல்லோரும்தான் இருக்கிறார்கள். அதே கூட்டம்தான். துளி கூட மாற்றமில்லைதான்.

ஆனால், ஒரு வெறுமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு போக கூட இப்போது யோசனையாய் இருக்கிறது. அவள் இருந்த போது சாக்கு சொல்லத்தேவையில்லை.

டெஸ்டினேஷனே அவள்தானே. ஆதலால் எங்களுக்கு சாக்குத் தேவைப்படவில்லை.

அவள் அவ்வப்போது சொன்ன கை வைத்திய குறிப்புகளை மட்டும் யாரேனும் பதிவு செய்திருந்தால், ஒரு புத்தகம் போடும் அளவிற்கு அதில் அவ்வளவு விஷயம் இருந்திருக்கும்.

உறை விழுந்த குழந்தைகளுக்கு உறை எடுக்கும் அழகே தனிதான். உறை எடுக்கும்போது வலியால் வீல் என்று குழந்தைகள் சில நிமிடம் தான் அழும். அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தைகள் முகத்தில் பூரிப்பை பார்க்கலாம்.

வயிறு சூட்டிற்காக அவள் கடைசியாக எனக்கு அரைத்துக்கொடுத்த மாங்கொட்டைத் தூள் இன்னும் ஒரு பிடி என்னிடம் இருக்கிறது.

எங்கள் எல்லோருக்கும் மருத்துவச்சியும் அவள்தான்.

டாக்டர் என்ன செய்வார்? ஸ்டெத்தை எடுத்து வைத்துப் பார்ப்பார். பிறகு மருந்து எழுதி கொடுப்பார்.

இவள் திருநீறை எடுத்துப் பூசிவிட்டு நெஞ்சை கொஞ்சம் தடவிவிட்டு தலையில் கைவைத்துப் பார்ப்பாள் அவ்வளவுதான். கூடவே கொஞ்சம் நாட்டு வைத்தியம்.

தன்னுடைய கொள்கைகளை யார் மீதும் அவள் திணித்துப் பார்த்ததில்லை.

ஆனால், அவள் கொள்கைகளை பின்பற்றாத அவளுடைய பிள்ளைகளே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ அவள் பெற்ற அனைத்து பிள்ளைகளும் சரி அவள் வழிதான் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் எங்களுக்கு.

பெரிய அட்வைஸ்கள் எல்லாம் ஏதும் இல்லை.

யாரிடமும் எதிர்ப்பு இல்லாத மனோபாவம். விட்டுக்கொடுக்கும் எண்ணம். விரோதியாக யாரையும் பார்க்காத பார்வை. அதே சமயம் நேர்மை.

மேற்கண்ட இந்த அடிப்படையைத்தான் அவள் எல்லோரிடமும் விதைத்தாள். நான் உட்பட.

இந்த விதைகளுக்கு அதிகம் நீர் பாய்ச்சியவர்களின் முகத்தில் அவள் சாயல் நன்றாகவே தெரியும்.

இப்பொழுதும் வீட்டிற்குள் நுழையும் போது திண்ணையில் அவள் அமர்ந்திருப்பது போல் ஒரு பிரம்மை வரும்.

இதற்கு முடிவே இல்லை….

இது அவளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

பேரன்புடன்,

ஜ.பாரத்
Grandson of Mrs.Thiruvannamalai

பிராயச்சித்தம்

செல்வகணபதி. நான் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் சிலரில் அவனும் ஒருவன். பள்ளிதொட்டே நண்பர்கள்தான். நடுவில் கொஞ்சம் விடுபாடு. உயர்நிலைக்கல்விக்குப் பின் மீண்டும் இந்தி டியூஷன் எங்களை சேர்த்து வைத்தது. லட்சியப் படிப்பெல்லாம் அல்ல. மாலை நேரத்தை கிரயம் செய்ய வேறுவழியில்லை. படிப்பு ரீதியான காரணத்திற்கு என்றுமே சுதந்திரம் உண்டு வீட்டில். ஆகையால் இந்த இந்தி டியூஷன் காரணம்.

ஆனால், அவன் கெட்டிக்காரன் நன்றாக படிப்பான். சராசரி உயரம்தான். பார்த்தவுடன் பழகக்கூடிய முகக்கட்டுடையவன். அவன் பேச்சும் அப்படித்தான். போலைட்னெஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதற்கு முழு அர்த்தம் கொண்டவன்.

இருவரும் வெவ்வேறு கல்லூரியாதலால் மாலை நேரத்து பேச்சுக்கள் மட்டுமே. இந்தி டியூஷன், வீடு, கல்லூரி இந்த சுழற்சியில்தான் அன்றைய வருடங்கள் கடந்தன. இறுதி வருட படிப்பு அது. அந்த வயதிற்கு பையன்கள் பேசும் பெண்கள் பேச்சுக்குகூட செவி சாய்க்காதவன். அவன் சுபாவமே அப்படித்தான். வீடு, அம்மா, படிப்பு.

ஒரு வாரம் தான் வரப்போவதில்லையென்றும், மீண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அன்று சந்திப்போம் என்று பேசிவிட்டுச் சென்றான். ஏதோ ஊரில் திருவிழா என்றான். எனக்குத் தனியாகவே கழிந்தது அந்த வாரம்.

கெடா மாதிரி வளர்ந்து சின்ன புள்ளைங்க கூட இந்தி டியூஷன் படிக்கற கொடுமை நம்ம நாட்ல மட்டும்தான் நடக்கும். அனுபவித்தேன். அதான் ஒரு வாரத்துல வந்திடுவான்ல என்ற நம்பிக்கை.

எனது கல்லூரியில் இறுதி பரீட்சை எழுத 75 சதவீதம் வருகைப்பதிவேடு அவசியம். சரியாக கணக்குப்போட்டு கட் அடிக்கும் பழக்கம் உள்ளவன் நான். அம்மாப்பேட்டை பேருந்து எண் 19 வந்தது, ஏறி ஜன்னலோரம் அமர்ந்து என் நோட்டை மடியில் வைத்தேன், கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மடி முழுக்க நோட்டுகள், கோபுரமாய்.

நடத்துனரும் ஓட்டுனரும் விடியற்காலை டீ மாஸ்டர் எண்ணெயில் பொறித்த பேய் வடையை உறிஞ்சி உறித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு பேய் வடைக்கும் ஒரு டீக்கும் பேருந்து பறக்கும். அது அவர்களுடைய அன்றாட டீசல்.

வண்டி கிளம்பும் முன் கல்யாணி கவரிங் கடைக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டவே பிரத்யேகமாய் இருக்கும் சுவரில் போஸ்டரில்,

ஷண்முகா பாலிடெக்கினிக்கில் பயிலும் மாணவன் மரணம் என்ற செய்தி. படித்துவிட்டு திரும்பிவிட்டேன். பேருந்து நகர நகர மீண்டும் பார்க்க நேர்ந்தது அதே போஸ்டரை. போஸ்டரில் எனது நண்பன் செல்வ கணபதி. தெளிவான படம் இல்லை அது. சற்று ஊர்ந்து பார்த்துதான் ஊகிக்கவேண்டியிருந்தது.

ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போனவன் இரண்டாவது வாரமாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்.

அன்று நான் கல்லூரிக்கு செல்லவில்லையென்றால் என்றுடை 75 சதவீத வருகைப்பதிவேடு, குறிப்பிட்ட பேப்பருக்கு மட்டும் போய்விடும், இறுதியாண்டு பரீட்சை எழுத முடியாமல் போய்விடும் என்ற பயத்தில், குனிந்து யாரும் அறியாதபடி, பிறகு துடைத்துக்கொண்டேன்.

கல்லூரிவிட்டு மதியம் இரண்டு மணி வாக்கில் வந்துவிட்டேன், மிகுந்த பாரம், மனவேதனை.

மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன். எப்படியும் இருப்பான், “தூக்கியிருக்கமாட்டார்கள்” என்ற நினைப்புதான்.

அது ஒரு அழகிய லெஷ்மி கடாஷம் பொருந்திய வீடு. பழைய காலத்து வீடு. அவன் வீட்டு வாசல் முதல் மெயின் ரோடு வரை ஜவ்வந்திப்பூவும் ரோஜாப்பு இதழ்களும் சிதறிக்கிடந்தன.

ஊதுவத்தி, ரோஜாப்பூ, ஜெவ்வந்திப்பூ, சந்தனம் இவையெல்லாம் ஒரே மாதிரியான வாசனைகளை கொண்டிருந்தாலும், அந்த நெடி கல்யாண வீட்டிற்கும் இழவு வீட்டிற்கும் மாறும் என்ற புரிதலை எனது மனம் ஏற்றுக்கொண்ட நாள் அது. நாராசமாயிருந்தது. கபகபா என்று வயிற்றை பிரட்டிக்கொண்டு என்னை ஒரு வழி செய்தது.

மன்னிப்பானா அவன் என்னை ? எப்பேற்பெட்ட சத்ரு த்ரோகம் புரிந்தவனாகிவிட்டேன் நான் ?

எனது இயலாமையை இப்படி சப்பைக்கட்டு கட்டி சொல்லிக்கொண்டிருக்க காரணம் ? போகவே முடியாது என்று தெரிந்தும், போக நினைத்ததும், மீண்டும் போக வேண்டாம் என்ற குரூர முடிவை எடுத்ததன் வெளிப்பாடுதான்.

முழு நேர வகுப்பு படித்தவன்தானே ? மாலை வர இருப்பான் என நினைத்தே இருந்துவிட்டேன் போல. இதுவும் சப்பைகட்டு கட்டத்தான் சொல்கிறேன்.

பேருந்திலிருந்து தடுமாறி விழுந்திருக்கிறான். மண்டையில் அடி. ஆஸ்பத்திரி தூக்கிக்கொண்டுப்போயிருக்கிறார்கள். ரத்தம் இல்லை. காயம் இல்லை. உயிர் பிரிந்துவிட்டதாம். அவன் படித்த கல்லூரியின் பேருந்து நிறுத்தத்திற்கு வேகத்தடை கிடையாதாம்.

அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் அந்த வீட்டை பார்த்துக்கொண்டே போவேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்த வீடு தரைமட்டமாகியிருந்தது. அவன் நினைவாக என்னிடம் நாங்கள் எடுத்துக்கொண்டே செல்பி போட்டாக்கள் இல்லை, ஒரு பாஸ்போர்ட் போட்டா கூட என்னிடம் கிடையாது, அந்த வீடு மட்டும்தான் இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

செல்வ கணபதி என்ற நண்பன் எனக்கு இருந்தான் என்று எங்கள் பள்ளியில் இருக்கும் பெயர் பட்டியல்தான் சொல்லும். நாங்கள் சாய்ந்து உட்கார்ந்து படித்த இந்தி டியூஷன் சுவருக்குத் தெரியும். எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம் சொல்லும். அவன் வீட்டு திண்ணை சொல்லும்.

நான் செய்தது தவறா ? இல்லை தவறு செய்துவிட்டு ஜஸ்டிபிகேஷன் தேடும் ஈனப்பிறவியா ?

“அடுத்த வாரம் வந்துடுவேண்டா” என்று அவன் சொன்ன வார்த்தைகள் மட்டும் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது இன்னமும்.

அவன் இல்லாத வீட்டை மட்டும் பார்க்க எனக்கு தைரியம் வந்துவிடுமா?  போயிட்டான்டான்னு சொல்லி அழும் அம்மாவை பார்க்கத்தான் தைரியம் வந்துவிடுமா ? எதையும் செய்யவில்லை. யாரிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்பேன் ? சாஷ்டங்கமாக அவன் அம்மாவின் காலில் விழுந்திருக்க வேண்டும். செய்யவில்லை. மறுநாளாவது வீட்டிற்கு போய் கேதம் விசாரித்திருக்க வேண்டும். செய்யவில்லை. அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகனுக்கு நண்பனாக இருக்கும் தகுதியை நான் என்றோ இழந்துவிட்டேன்

இதற்கு பிராயச்சித்தத்தை தேடினாலும் கிடைக்காது.

 

wallpaper2you_347831

​மனிதக் கடவுள்களும் ரத்தக் காட்டேரிகளும்

1997-1998 ஆம் ஆண்டு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்காக திருச்சியிலிருந்த சித்தியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கண்ணதாசனின் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” என்ற பாடலில்தான் தினப்போழுது எனக்கு விடியும். ஓரளவு சீக்கிரம் எழுந்துவிடுவது வழக்கம். விடுமுறைக்கே உரித்தான எல்லா வேலைகளையும் செய்வேன் நேரத்தைக் கடத்த பல வழிகள் இருந்தது அப்போது.

மைக்கேல் ஐஸ் கிரீம் கடைக்கு செல்லாத திருச்சி வாசிகளே இல்லை என்று சொல்லலாம். நானும் அங்கு அழைத்து செல்லப்பட்டேன். ஜிகர்தண்டாவில் மிதக்கும் அந்த ஐஸ் க்கூப்பின் சுவையை அடுத்து எனக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று இந்த மைக்கேல் ஐஸ்.

ஒரு முறை அந்த கடைக்கு செல்லும்போது ஐஸ் கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இரவு வந்தவுடன் கட்டிலில் படுத்துக்கொண்டே வீரப்பனின் நேர்காணலை பார்த்தேன். அப்போதுதான் அந்த நக்கீரன் நடத்திய வீரப்பன் நேர்காணல் தொலைக்காட்சியில் வந்த பரபரப்பு சமயம். வீட்டு வாசல் கதவில் ரஜினியின் முத்துப் பட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அதைப் பார்த்துக்கொண்டே கண் அயர்ந்தேன். ஒரு இரண்டு மணி நேரத் கழித்து சரியான காய்ச்சல். நான் முதன் முதலில் காய்ச்சல் என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தியதும் திருச்சியில்தான். அங்கு அப்படித்தான் சொல்வார்கள்.  தஞ்சை பக்கம் ஜுரம் என்றுதான் சொல்வார்கள்.

வீட்டிற்கு பக்கத்திலுள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சித்தி கூட்டிச் சென்றார்கள். உடன் தம்பிகளும் வந்த நினைவு. சாதாரண காய்ச்சல்தான் இரண்டு நாள் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சொல்லி மருந்து எழுதிக்கொடுத்தார் டாக்டர். ஊரில் இருந்து வரும்போதே கையில் கொஞ்சம் பணம் இருந்த நினைவு. பெரிய மனுஷன் போல அதையும் மேல் பாக்கெட்டில் வைத்து எடுத்துச்சென்றிருந்தேன். வெளியே வந்ததும் பாக்கெட்டில் கைவிட்டு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினேன். சித்தி வாங்க மறுத்துவிட்டார். “அடி விழும் உள்ளே வை” என்று சொன்னவர் கம்பௌண்டரிடம் ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம், அவருக்கு டிப்ஸ் வேறு கொடுக்கவேண்டுமோ என்று. பிறகுதான் தெரிந்தது டாக்டர் கட்டணமே ஐந்து ரூபாய்தான். மருந்து மாத்திரையும் அதைவிடக் குறைவு. ஒரு பத்து ரூபாயில் அன்று சிகிச்சை முடிந்து மீதமிருந்த நாட்களை நன்றாக கழித்துவிட்டு, கடைசி நாள் மலைக்கோட்டை வாசலில் ஒரு லெதர் பெல்ட்டு வாங்கிக்கொண்டு மீண்டும் மைக்கேல் கடையில் ஒரு முறை ஐஸ்ஸை முடித்துவிட்டு தஞ்சாவூர் திரும்பினேன். அப்போது தஞ்சையில் சராசரி மருத்துவக் கட்டணம் 15 முதல் 30 வரை இருந்தது.

Affordable என்ற வார்த்தைக்கிணங்க கட்டணம் வசூலிக்கும் டாக்டர்கள் திருச்சியில் மட்டுமல்ல தஞ்சையிலும் உண்டு என்பதை மனோகரன், சிவக்குமார், மோகன், சேகர் போன்ற டாக்டர்களை கண்டுதான் தெரிந்துகொண்டேன். அப்பாவின் நண்பர் மற்றும் சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டிட் திரு.மணிமாறன் என்னிடம் ஒருமுறை கூறினார், அந்தக் காலத்தில் டாக்டர்களை பார்க்க வரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை இலவசமாக கொடுத்து போகும் வழிச் செலவிற்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கொடுத்து அனுப்புவார்களாம் என்று.

மேற்கண்ட டாக்டர் வகையாறாக்கள் பொதுவாக மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அல்லது சேவை நோக்கம் உள்ளவர்கள். இவர்களுக்கு மக்களின் நாடி நன்றாகவே தெரியும். ஆனால், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நீட் போன்ற தேர்வுகளால் இனி இம்மாதிரியான டாக்டர்களை நமது எதிர்கால சந்ததியினர் புராணங்களில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. அல்லது விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படம் பார்த்து அவர்கள் மனசை தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.

இனி நாம் எல்லோருமே எலைட் நோயாளிகள்தான்.  ஆனால் சிகிச்சைகொடுப்பது மட்டும் ரத்தக்காட்டேரிகள்.  கண்டிப்பாக டாக்டர்கள் அல்ல.​

v_for_vendetta_by_movabletype-d4ni2vb

மணிப்பூர் அம்மாக்களும், தமிழக தந்தைகளும்…

இன்றைய நிர்வாண போராட்டம் இந்தியாவிற்கு புதிது அல்ல.
விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்திற்கு பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. இதில், ஆளும் கட்சியை ஆதரிக்கும் பக்தர்கள் சிலர், தமிழகமே தலை குனிந்தது. தமிழர்கள் தலை கவிழ்ந்தது என்று பாடி வருகிறார்கள்.
ஒரு தேசத்தின் தலைநகரில் அந்த தேசத்தின் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் அம்மணமாக போராடியது எப்படி அந்த மாநிலத்தின் அவமானம் என்று பேச முடிகிறது இவர்களால் ? இது ஒட்டு மொத்த இந்தியாவிற்கே அவமானம்தானே ? மணிப்பூர் பெண்கள் “இந்தியன் ஆர்மி ரேப்புடு அஸ்” என்று பதாதைகளை நிர்வாணமாக நின்று போராடியதை இந்த தேசம் மறந்துவிட்டதா என்ன ? அன்று மணிப்பூர் அம்மாக்கள். இன்று தமிழகத்தின் தந்தைகள். அவ்வளவுதான்.
தமிழகமே தலை குனிந்தது. தமிழர்கள் தலை கவிழ்ந்தது என்று ஏன் இந்தியாவிடமிருந்து தமிழ்நாட்டை பிரித்து பேசுகிறீர்கள் ? இப்படி பேசுபவர்களை நாம் இந்திய தேசியவாதி என்று கூறலாமா ?
தலை கவிழ்ந்து அம்மணமாக நிற்பது அந்த பாரத மாதாவேதானேத் தவிர தமிழ்நாடோ தமிழர்களோ அல்ல.
பொன் ராமச்சந்திரன் எழுதிய கவிதைதான் நினைவிற்கு வருகிறது..
நாங்கள் தமிழர்கள்
உலக நாடுகள் அவையில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கணியன் பூங்குன்றன்
வரிகளே உங்களை வரவேற்கும்
உலக மொழிகளில்
முதல் மொழியாம்
எங்கள் தமிழில்
திருவள்ளுவர் தந்த
திருக்குறளை
அறிஞர்கள், அறிந்தவர்கள்
எல்லாம் போற்றுகிறார்கள்
உலகப் பொதுமறை இதுவே என்று.
ஆனால் நாங்கள்
வாலறிவன் தாளை வணங்காது
வந்தேறிகள் காலைக் கழுவினோம்
குடித்தோம்.
தறுதலைகள் காட்டிய கல்லைக்
கடவுள் என நம்பினோம்
தந்திரச் சொல்லை எல்லாம்
மந்திரம் என ஏற்றோம்.
உலகம் மேலே ஏறஏற
மேலே இருந்த நாங்கள்
வீழ்ந்தோம் படுகுழியில்.
மூடத்தனத்தின் எல்லைக்கோட்டில்
விழிமூடிக் கிடந்தோம்
பகுத்தறிவுப் பகலவன்
சூட்டொளிப் பட்டு
குதித்தெழுந்தோம்.
அழுக்கு முதுகுக் கயிறுகள்
இழிவுபடுத்திய போது
பகுத்தறிவு வாளால்
அறுத்துப் போட்டோம்.
விறுவிறுவென உயர்ந்தோம்
கல்வியில் பொருளில்
பதவியில் புகழில்
ஆனால்
பகுத்தறிவில்…?
நேற்று கயிறு கட்டினோம்
இடுப்பில்
மானம் காக்கும்
கோவணத்திற்காக
இன்றும்
கருப்பு பச்சை
சிகப்பு மஞ்சள்
கிளிஞ்சல்கள் மணிகள்
பொம்மைகள் சொருகிய
முடிச்சிட்டக் கயிறுகளை
கோயில் தெருக்களில் வாங்கி
கட்டுகிறோம்
இடவலக் கைகளில்
மூடத்தனம் காட்ட.
பச்சைக் குழந்தை
பழுத்த முதியவர்
படிக்காத பாமரன்
பெரும் படிப்பாளி
தொழிலாளி முதலாளி
ஏழை பணக்காரன்
நீதிபதி குற்றவாளி
அரசு அலுவலர்கள்
அமைச்சர்கள்
ஆளப்படுவோர்
கைகளில் எல்லாம்
கைஞ்ஞாண்!
எல்லாரும் கோவணம் கட்டாதவர்களாய்.
06-hema-malini-modi-latest
இந்திய நாட்டின் பிரதமர் விவசாயிகளின் பிரச்சினையை இந்திய விவசாயிகள் சங்கத் தலைவி ஏமா மாலினியிடம் கைகட்டி விசாரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா….

 

 

பெர்னாட் ஷாவை நான் வாசித்தது இல்லை. ஆனால், உலக மேடையில் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்லக் கேட்டதால் இப்படிக் குறிப்பிட்டேன்.

இயற்பெயர் விருத்தாச்சலம்.  25 ஏப்ரல் 1906 ஆம் ஆண்டு பிறப்பு. சொந்த ஊர் திருநெல்வேலி. 1931 இல் பி.ஏ பட்டம் பெறுகிறார். நெல்லை இந்துக் கல்லூரியில் படிப்பு.  இவர் எழுதிய ஆண்டுகள் 1934 முதல் 1948 வரை மட்டுமே. பல பத்திரிகைகளில் வேலை பார்த்துள்ளார். திரைப்படத்துறையிலும் கால் பதித்துள்ளார். காச நோய்க்கு ஆளாகி சூன் 30 1948 ஆம் வருடம் மறைந்தார். வாழ்ந்தது வெறும் 42 வருடங்கள். எழுதிய ஆண்டுகள்  14 வருடங்கள்.

இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகத்தின் கடையில் 2015 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழாவில் வாங்கினேன். அப்போதே வீட்டு அலமாரிக்கு போனது. இப்போதுதான் படிக்க முடிந்தது. அப்போது இப்புத்தகத்தை வாங்கும்போது நினைத்தேன் ஒரு சிறுகதை தொகுப்பிற்கு ரூ.550 அவசியமா என்று ?  இன்று படித்து முடித்த பின்பு உணர்கிறேன். அந்த அச்சகத்தார்கள் அவருடைய உண்மையான கையெழுத்துப் படியில் இருந்து இந்த புத்தகத்தை உருவாக்கி அவர் எழுத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு ரூ 5000 கூட கொடுக்கலாம்.

ஏதோ சில வருடங்களாக தமிழ் இலக்கியத்தை வாசிப்பதால் இவருக்கு வக்காளத்து வாங்க எனக்கு திராணி உள்ளது என்று நம்புகிறேன்.இவருடைய சிறுகதைகளை அந்தகாலத்தில் படித்தவர்கள் இந்த காலத்தில் நாம் பார்த்த இண்டர்ஸ்டெல்லார் படத்திற்கு சமம். சத்தியமாக சில கதைகள் புரியவேயில்லை. அவருடைய போக்கை புரிந்துகொள்ள நமக்கு சில வருடங்கள் தேவைப்படும். அல்லது இவருடைய சிறுகதையை மையமாகக்கொண்டு எம்பில் பிஎச்டி படிக்கும் தமிழ் ஆராய்ச்சியாளர்களை கண்டு பேசினால் விளங்கும். சில கதைகள் தான் அப்படி.

இவருடைய சில கதைகள் நம் உயிரை வெளியே எடுத்துப்போட்டு கொன்றுபோடும். சில கதைகள் மனதிற்கு திருப்தி தரும். சில கதைகள் அச்சச்சோ என்று உச்சு கொட்ட வைக்கும். சில கதைகள் பிரம்மிக்க வைக்கும். சில கதைகள் ஜவ்வுமாதிரி போகும்.
பொதுவாக மனிதனின்  சிறுவயது ஆசைகளை பூர்த்தி செய்யும்போதும், நினைத்ததை முடித்துக்காட்டும் போதும், கை நிறைய பணம் சம்பாதிக்கும்போதும், சொந்தக்காரர்கள் முன் வாழ்ந்துகாட்டும்போதும், எதிரிகள் முன் வளர்ந்துகாட்டும்போதும் மனதைத் தாண்டி ஆன்மாவும் சந்தோஷப்படும். அதை உணரவும் முடியும். படிப்பதால் ஆன்மாவால் சந்தோஷப்பட முடியுமா ?  ஆனால் சில கதைகளை படித்து முடித்தவுடன் நமது ஆன்மாவே சந்தோஷப்படும். அப்படிப்பட்ட கதைகள் கொண்ட தொகுப்புதான் இப்புத்தகம்.  எனது ஆன்மா சந்தோஷப்பட்டதை முதன் முதலில் இவருடைய கதையில்தான் உணர்ந்தேன். மிகைப்படுத்தி கூறவில்லை. படித்துப்பாருங்களேன். உங்கள் ஆன்மாவையும் சந்தோஷப்படுத்துங்கள்.
புதுமைப்பித்தன் பேசுகிறார்…..
நீங்கள் இவைகளை (கதைகளை படைப்புகளை) கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக்கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.
நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில் மனிதன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா ? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே ? என் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் உயிரும் வேகமும் என் ஆத்திரத்தின் அறிகுறி.
கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவித் செல்லும் தவளை நடை நானகவே அமைத்தேன். அது நானாக எனக்கு அமைத்துக்கொண்ட பாதை. நான் எந்த காலத்தில் இந்த தவளைப் பாய்ச்சலை பின்பற்றினேனோ அதே நேரத்தில் மேலை நாடுகளில் அதுவே சிறந்த சிகரமாக கருதப்பட்டதை ஒரு நண்பரிடம் பேசும்போது அறிந்துகொண்டேன்.இலக்கிய சிங்காசனத்தில் ஏறி அமர்ந்துகொள்ள எனக்குத்தான் உரிமை உண்டு என்று கட்சி பேச நான் இந்த கருத்தை சொல்லவில்லை. இருந்தாலும் எனது போக்கு உலக இலக்கியத்தின் போக்கோடு சேர்ந்து இருந்தது என்பதைக் எடுத்துக்காட்டவே இதைக் குறிப்பிட்டேன். இனிமேல் படித்துப் பாருங்கள்.
gggg
புதுமைப்பித்தனின் கையெழுத்து பிரதி
unnamed
புதுமைப்பித்தனின் கையெழுத்து பிரதி
IMG_20170216_091108 (1)
புத்தகத்தின் அட்டை
நூல் புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர் புதுமைப்பித்தன்
ஆண்டு 2000 முதற்பதிப்பு 2014 எட்டாம் பதிப்பு.
பக்கங்கள் 827
விலை ரூ.550/

Men, God and Jute bags*

A man with lot of difficulties in his life met the God. He thought that he was the only one having lot of difficulties in his own life and rest of the people living a smooth and swift life. The conversation between the God and “that man” has started. 

God, “what is your problem” ?

Men, “I have lot of issues, difficulties in my life. I can’t bear any more”.

God, “How much ?”

Men, “lot … lot of issues and difficulties which are always creating hurdles making me to live a unsatisfied life, only for me, why?”

God, “so you mean that only you are suffering with issues and difficulties” ?

Men, “yesssss, no one except me…….”, he replied sarcastically. 

God, “I will plan a session tomorrow. Please bring all your issues or difficulties in a jute bag and meet me after two days in the same place and I order rest of the human beings who thinks the same way like you in this Universe to do the same”

Men, “How can I touch and feel those things. It’s Intangible huh”?

God, “No son. From today you can see your problems through your bare eyes. You can touch them and feel and store them anywhere”.

Men, “Thank God, so that I can throw it away ?

God, “Nay. You can’t. Those are all your Karma effected things. You cant throw it or erase it as well.

Men. “Fine God. I will do”

That men put all his issues and difficulties in a jute bag and carried aback of him. He witnessed a large number of gatherings in the same way carrying their respective bags.

Suddenly God appeared in front of them. He incarnated Himself as a XXXL size in the sky to reach the world audience and started to speak. 

“Good evening folks. Hope you are doing good”

“Idiot” some one told in the gathering but God tolerated that. Forgiven. 

“I made a big wall over there in which there are a number of nails were put up. Go there and hang all your jute bags over there and come and assemble in the same place”.

“Useless super power being” some one told in the gathering but God again tolerated. 

Everyone rushed to the place and placed their jute bags assuming that their Karma or issues of life would end on that day itself. It took few hours for them to assemble. God appeared. 

“Great. Lot of jute bags. I have an announcement for all of you”

Everyone was curious. 

“I am going to switch off this place into dark for some time and in the mean time everyone should take their own jute bag where they kept”.

All thought that this was totally an insane. 

God switched off the area into dark. Everyone rushed and took their jute bags. On the way to the assemble area our hero “that man” was felt the weight of the jute bag was so heavy before. Everyone assembled with their own jute bags.

God appeared and told, “the bag you are holding now is not yours, but of your fellow citizens. You all interchanged your jute bags without your knowledge” ! 

Everyone shouted. They can’t bear the weight of the jute bag and they requested to God to give back their own jute bag which is bearable to carry. 

“That man” appeared before the God as the representative for the whole mass and told, “Our issues and difficulties or Karmas should be dealt by us only not anyone else, I have finally understood. Kindly bless us with our old jute bags and remove the tangibility of our problems and we are ready to face the ground reality in our day to day life .Bless us with lots of confidence and will power”. 

God, “Stay blessed, lets follow your heart and don’t go with the flow; only dead fishes will go with the flow; Warriors in life should not hesitate to face the challenges what life gives you”.

God disappeared. 

*Story inspired from my class teacher Mr.T.Uthirapathy (TU).

man.jpg

கொலு கொலு சுண்டல்…..

நவராத்திரி கொலு கொலு சுண்டல்… நவராத்திரி கொலு கொலு சுண்டல்….
நவராத்திரி கொலு கொலு சுண்டல்… நவராத்திரி கொலு கொலு சுண்டல்….

கொலு கொலு சுண்டல்…கொலு கொலு சுண்டல்….

அப்போதெல்லாம் கொலு வைக்கும் வீட்டில் இப்படி பாடிக்கொடே சுண்டல் சாப்பிட வருவார்கள் சிறுவர்கள். அதுமட்டுமின்றி உறவினர்கள் நண்பர்களை கொலுவிற்கு அழைப்பது பழக்கம். வீட்டில் நல்ல காரியம் நடப்பதற்கு சமமாக இதை பாவித்து செய்வார்கள். 9 மரப் படிக்கட்டுகள் வைத்து ஐந்து பெரிய பெட்டிகள் அடங்கிய பொம்மைகள் வைத்து எங்களது கும்பகோணத்து இல்லத்தில் நவராத்திரியை கொண்டாடுவோம். தற்போது அந்த கொலு பொம்மைகளை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு கொடையாக கொடுத்துவிட்டோம். எங்கள் தெருவிலேயே ஓரளவிற்கு பெரிய மற்றும் அதிக படிக்கட்டுக்கள் கொண்ட கொலு வீடு எங்களுடையதுதான். பொம்மையை பராமரிப்பதற்கே பொறுமை வேண்டும்.
 
இன்று …. கொலுபொம்மைகளை பார்த்து காலை ஸ்பென்சர் பிளாசாவின் உள் அரங்கினுள் கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன். எல்லாம் நினைவிற்கு வந்தன. மெழுகுவர்த்தி வச்சி படகு விட்டதை, சுண்டல் சாப்பிட்டதை, அட்டப்பெட்டியில பொம்மைய பேப்பர் சுத்தி மேல ஏத்தி வச்சதை, கொலுப் படிக்கு முன்னாடி பூங்கா அமைச்சதை, லைட்டு போட்டதை, பலகை மேல் ஏறி வேஷ்டியை விரிச்சி விரிச்சி மேல உத்தரம் வரைக்கும் ஏறியதை என்று ஆசை தீர ரிவைண்ட் பண்ணி ரிவைண்ட் பண்ணி பார்த்தேன். அது ஒன்றுமட்டுந்தானே இப்போதைக்கு சாத்தியம். கொலு கொலு சுண்டல்… கொலு கொலு சுண்டல்…. என்று மனதினுள் பாடிக்கொண்டே வந்தேன், ஆனால் சுண்டல் கொடுக்கத்தான் யாருமேயில்லை.

பஞ்சுமிட்டாய் வாங்கித்தான்னு கேட்டு அது கெடைக்காத கொழந்த அந்த பஞ்சுமிட்டாயையே அப்படியே ஏமாற்றத்தோட பார்க்கும் ஒரு பார்வை. அதே போல் கொலுவை யாராலும் இனி எனக்கு வாங்கித்தந்துவிட முடியாது.

ஏனென்றால் இது ஆண்டவன் கணக்கு அல்ல. ஆண்டவன் கட்டளை.

img_20160928_094015756_hdrimg_20160928_093856140

 

யார்தான் இந்த சாமர்த்தியசாலிகள் ?

ignore
சாமர்த்தியம் என்பதன் வார்த்தையில் இவ்வளவு வன்மம், அகங்காரம், சுயநலம், பொய், உண்மையின்மை, அகந்தை இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. “சாமர்த்தியமா அவன் அந்த வேலையை முடித்துவிட்டான்” என்பதின் பின்னணியில் ஏமாற்றியோ, பொய் சொல்லியோ அல்லது உண்மையை சொல்லாமலோ ஏதோ ஒன்று சாதிக்கப்பட்டிருக்கும். அங்கு ஏமாற்றப்பட்டவன் என்று ஒருவன் கண்டிப்பாக இருப்பான். சாமர்த்தியம் என்ற சொல்லே ஒரு நம்பிக்கைத் துரோகத்திற்கான சொல் என்பது என்னுடைய முழு நம்பிக்கை. இதில் என்னுடைய பெர்செப்ஷனை மாற்றிக்கொள்வது முடியாத விஷயம். இதில் ஏமாற்றப்பட்டவன் இடத்திலிருந்து இதை நான் ஏழுதுகிறேன், ஒரு குற்றவாளியாக.

உதாரணத்திற்கு,

சில மனிதர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு இடம், பொருள், சுற்றுச்சூழல் இதையெல்லாம் பழகும் வரை பழகிவிட்டு, தங்களுக்கென்று ஒரு வட்டம் அமைந்ததும் ‘சே டு மை பொட்டக்ஸ்’ என்று சென்று விடுவார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படியும் வாழ்க்கையில் நாம் சந்தித்து இருப்போம். இப்படி ஒருவனை சமீபத்தில் சந்தித்தேன். கடைசியாக இவனைப்போல் 2011ல் சந்தித்தேன். இவன் 2016. 2011ஆனவன் இப்போது எங்கிருக்கிறான் என்றே எனக்கு தெரியாது. தொலைபேசி எண்ணை அழைத்தால் நம்பர் உபயோகத்தில் இல்லை என்கிறது. ஆனால் இந்த புதியவன் கொஞ்சம் நல்லவன் கொஞ்சம் சீக்கிரமே நகர்ந்துவிட்டான்.

இவர்களைப்போன்றவர்களை பார்க்கும்போது கோபம் தலைக்கு ஏறுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் கூறினார் அவ்வளவு ஆட்டிடியூட் இருக்கக்கூடாது உங்களுக்கு என்றார். அதை தலையில் ஏற்றி வைத்திருப்பவனுக்குத்தான் இந்த ஆட்டிடியூட் பற்றி சிந்தனைகளும் வரும் இல்லையெனில் தம்மை ஏதாவது சொல்லி புறந்தள்ள இம்மாதிரியான டெர்மினாலஜியை அவர்கள் உபயோகிப்பது வழக்கம். ஒருவனுடைய பாங்கு மாறுகிறது என்றால் அது அவர்களுடைய ஆட்டிடியூட் மாற்றத்தினால்தான் என்பது அவர்களுக்கு புரிந்தும் அந்த கேள்வியை நம்மிடம் கேட்பார்கள். முதலில் கேட்பவன் நல்லவன் அல்லது தவறிழைக்காதவன் ஆகிவிடுகின்றான்.

ஊர் பெயர், வேலை என்ன செய்தேன், எங்கிருந்து வருகிறேன், கல்யாணம் ஆனவனா, குழந்தைகள் உள்ளனவா, முகம் சுளிக்கிறவனா, தலைமேல் உட்கார்ந்தால் அனுமதிப்பவனா….மொத்தத்தில் அவர்களுடைய ஞாயத் தெராசில் நம்மை எடைபொட்ட பின் அவர்களுக்கு இந்த ஆட்டிடியூட் பற்றிய பேச்சு எழுகிறது. அதுவரை பேச்சுத் துணைக்கு மட்டுமே நாம் அவர்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பதுதான் இதில் வேடிக்கை.

எதிரே வரும்போது கூட இக்னோர் செய்துவிட்டு செல்லும் பிராணிகளும் இருகின்றன. நாமும் அவ்வாறுசெய்யும் போது அவர்களுக்கு இந்த ஆட்டிடியூட் பிரச்சினை. வடிவேலு பாணியில், உனக்கு வந்தா ரத்தம எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்பதுபோலத்தான்.

ஆக. நேர்பட பேசு என்று பள்ளியில் சொல்லிக்கொடுத்ததையும். மனதில் உள்ளவற்றை பேசு என்று கல்லூரியில் சொல்லிக்கொடுத்ததையும் செய்தால் அவர்கள் நம்மிடம் ஆட்டிடியூட் என்ற சாமர்த்தியத்தை காண்பிப்பார்கள்.

இதுவே, அதற்கு நேர்மாறான வேலையில் இறங்கி், வேண்டியவற்றை சாதித்துக்கொண்டு, வேண்டியவர்களை மட்டும் சுற்றி வைத்துக்கொண்டு, தேவை என்கிறபோது இம் மாதிரியான ஆட்களிடம் பேச்சை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு பெயர் சாமர்த்தியசாலிகள். நான் சொல்லவில்லை உலகம் அப்படிச் சொல்கிறது. என்னைக் கடந்து சென்ற அனைத்து சாமர்த்தியசாலிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தேவைக்காகவும் உதவிக்காகவும் என்றும் எப்போதும் காத்திருக்கும் உங்கள் “நண்பன்”.

வாழ்வில் ஒருமுறையாவது உங்களைபோலவே நீங்கள் சிலரை சந்திப்பீர்கள்.
என் உண்மையான நட்பிற்கு நீங்கள் கொடுக்கும் விலைதான் அது. அந்த விலையை நீங்கள் கொடுத்தே தீரவேண்டும். அதில் இருந்து நீங்கள் தப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லை.